ஜூலை 19-ல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறியதாவது:
நாட்டின் 13-வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 16-ந் தேதி தொடங்கும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 30-ந் தேதி ஆகும். வேட்பு மனுத்தாக்கல் செய்வோரை 50 எம்.எல்.ஏக்கள் முன்மொழிந்திருக்க வேண்டும். வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய ஜூலை 2-ந் தேதி கடைசி நாள்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஜூலை 19-ந் தேதி நடைபெறும். நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வாக்குப் பதிவு நடைபெறும். இத்தேர்தலில் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பர். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் ஜூலை 22-ல் வெளியாகும்.
இத்தேர்தலை மாநிலங்களவையின் செயலர் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு வகித்து நடத்த உள்ளார் என்றார் அவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படக் கூடும் எனத் தெரிகிறது. அதிமுக, பிஜூ ஜனதா தளம் சார்பில் சங்மா போட்டியிடுகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியை தங்களது அணிக்கு விட்டுக் கொடுத்தால் காங்கிரஸ் வேட்பாளரை பாஜக அணி ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது.