சியாச்சினில் படை விலக்கம் தொடர்பான இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை
இஸ்லாமாபாத்: சியாச்சின் பனிமலையில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் படைகள் விலகிக் கொள்வது பற்றிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
உலகின் உயரமான போர்முனையான சியாச்சின் பனிமலையில் இந்தியா, பாகிஸ்தான் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டிருக்கின்றன. 1984-ல் சியாச்சின் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க முயன்றதையடுத்து சியாச்சின் போர் நடைபெற்றது. பின்னர் இருநாட்டுப் படைகளும் எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சியாச்சின் பனிமலையில் பெரும்பனிப் பாறை சரிந்து பாகிஸ்தான் ராணுவத்தின் 139 பேர் உயிரோடு புதையுண்டனர். இதைத் தொடர்ந்து சியாச்சினிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் படைகளை விலக்கிக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்திய அரசோ இதில் விட்டுக் கொடுப்பதாக இல்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் சென்றுள்ள இந்திய பாதுகாப்புச் செயலாள்ர சஷிகாந்த் சர்மா தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலர் நர்கீஷ் தலைமையிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சியாச்சின் பனிமலையிலிருந்து படைகளை ஒரே நேரத்தில் இருநாடுகளும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் படை விலக்கத்துக்கு முன்பாக சியாச்சின் பகுதி உரிமை தொடர்பான உறுதியான நிலைப்பாடு ஒன்றை மேற்கொள்ளும் வகையில் இந்தியத் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இரண்டு நாள் பேச்சுகளின் இறுதியில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
சியாச்சின் படைவிலக்கம் தொடர்பாக அதிரடியான எந்த ஒரு முடிவையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.