கலாம் போட்டியிட மறுத்துவிட்டதால் சங்மாவுக்கு பாஜக கூட்டணி, மமதா ஆதரவு?
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறுத்துவிட்ட நிலையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பி.ஏ.சங்மாவை ஆதரிக்கக் கூடும் என்று தெரிகிறது. அப்துல் கலாமை முன்னிறுத்திய மமதாவும் சங்மாவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பி.ஏ.சங்மாவை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவும் பிஜூ ஜனதா தளத் தலைவரும் ஒடிஷா முதல்வருமான நவீன் பட்நாயக்கும் முன்னிறுத்தினர்.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியானது பிரணாப்பை முன்னிறுத்த அந்தக் கூட்டணியில் மமதா பானர்ஜி கலக் குரல் எழுப்பி கலாமை களமிறக்குவேன் என்று சபதம் போட்டார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியும் கூட முடிவெடுக்க முடியாமல் தத்தளித்தது. கலாமை ஆதரிப்பதா? சங்மாவை ஆதரிப்பதா? என்று திணறி ஒருவழியாக கலாமை களமிறக்குவதற்காக பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. கலாமோ ரொம்பவும் யோசித்து தாம் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில் பி.ஏ. சஙமாவை ஆதரிப்பதுதான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கான ஒரே வாய்ப்பாக இருக்கிறது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையும்கூட பாஜகவுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துவிட்டது என்றே கூறலாம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெறாத அனைத்து கட்சிகளையும் அதாவது அதிமுக, பிஜூ ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றை எளிதாகவே தமது அணியில் இணைத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகவே பாஜக இதனைக் கருதக் கூடும்.
சங்மாவை ஆடரிப்பது தொடர்பாக இன்று இரவு பாஜகவின் உயர்நிலைக் கூட்டத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திலும் முடிவெடுக்கப்படலாம்.