'புதுக்கோட்டை': கட்சி நிர்வாகிகளை கூட சந்திக்க ஜெ. மறுத்துவிட்டார்- விஜயகாந்த் கிண்டல்
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தல் வெற்றியைக் கொண்டாடக் கூட முடியாத நிலையில் அதிமுக இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக டெபாசிட் தொகையை இழக்காமல் 30,500 வாக்குகள் பெற்றுள்ளது. இதையடுத்து தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்தது.
அதில், புதுக்கோட்டை தொகுதியில் 3 வாக்குச் சாவடி மையங்களில் அதிமுகவை விட அதிக ஓட்டுக்கள் பெற்றுத் தந்த 3 பொறுப்பாளர்களுக்கு விஜயகாந்த் தங்க மோதிரம் அணிவித்தார்.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலான நிர்வாகிகளைப் பாராட்டினார். இவர் தலைமையில் செயல்பட்ட 3 ஒன்றிய செயலாளர் பொறுப்பு வகித்த மூன்று பூத்துகளில் அதிமுகவைவிட தேமுதிக அதிக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பாராட்டு தெரிவித் விஜய்காந்த் 3 ஒன்றியச் செயலாளர்களுக்கும் 4 கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார்.
பின்னர் விஜய்காந்த் பேசுகையில், புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெறாவிட்டாலும், 50,000 வாக்குகள் பெறுவோம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 30,000 வாக்குகளே கிடைத்துள்ளது. இந்த வாக்குகளும் நாம் ஏறுமுகத்தில் இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.
நாம் டெபாசிட் பெற்றதை அதிமுகவால் ஜீரணிக்க முடியவில்லை. நகரப் பகுதிகளில் வாங்கியதைப் போன்று கிராமப்பகுதிகளில் கூடுதல் ஓட்டுக்கள் வாங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
பணம் பலம் நிறைந்த அதிமுகவுடன் போட்டியிட்டு அதிக ஓட்டுக்கள் பெற்றுள்ளோம். இதற்கு உங்கள் உழைப்புதான் காரணம். மேலும் உழைக்க தயாராக இருக்க வேண்டும். நமக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அதற்கு இந்த புதுக்கோட்டை இடைத்தேர்தல் எடுத்துக்காட்டு. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் டெபாசிட் தொகையைக்கூட பெற மாட்டோம் என்று கூறிய ஆளுங்கட்சி, இப்போது பெற்ற வெற்றியையே கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறது. புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பணியாற்றிய அதிமுக நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா பார்க்கவே மறுத்துவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஆனால் நம்மைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம்.
இனிமேல் நாம் போராட வேண்டியது நிறையவுள்ளது. பல நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கிறது. ஓராண்டு கடுமையாகப் போராடினால், பிரகாசமான வாழ்க்கை நமக்கு காத்திருக்கிறது.
கட்சியில் இருந்து போனவர்கள், போகிறவர்களை பற்றியெல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. நீங்களும் கவலைப்பட வேண்டாம். இருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இனி தங்கள் பொறுப்பை உணர்ந்து அனைவரும் செயலாற்ற வேண்டும் என்றார் விஜயகாந்த்.
முன்னதாக புதுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் ஜாகிர் உசேன் பேசுகையில், கண்டிப்பாக 50,000 ஓட்டுக்கள் பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. புதுக்கோட்டை நிர்வாகிகளுடன் மற்ற தேர்தல் பொறுப்பாளர்கள் இணைந்து சிறப்பாகத் தேர்தல் பணியாற்றி இருந்தால், கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்திருக்கும் என்றார்
கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கார்த்திக் தொண்டைமான் நாளை பதவி ஏற்பு:
இந் நிலையில் புதுக்கோட்டை சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் நாளை எம்.எல்.ஏவாக பதவி ஏற்கிறார். அவருக்கு சபாநாயகர் ஜெயக்குமார் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.