நிலமோசடிக்கு உடந்தை:அரசு அதிகாரியை கண்டித்து டிஜிட்டல் போர்டு-24ல் சாலை மறியல்
தூத்துக்குடி: எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு நிலமோசடிக்கு துணை போன இணை ஆணையரை கண்டித்து ஊராட்சிமன்ற தலைவர்கள் வைத்த டிஜிட்டல் போர்டை போலீசார் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா வெங்கடேசபுரம் பஞ்சாயத்து தலைவர் ராமலெட்சுமி, ராமனூத்து பஞ்சாயத்து தலைவர் ராமசந்திரன், சித்தலங்கரை பஞ்சாயத்து தலைவர் சுப்புலெட்சுமி, கோவில்பட்டி ஒன்றிய 3வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் மற்றும் பொது மக்கள் விவசாயிகள் நேற்று காலை எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே திரண்டனர். பின்னர் நிலமோசடி கும்பலுக்கு துணை போவதாகக் கூறி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களுக்கான நிலசீர்திருத்த இணை ஆணையர் பாலசுப்பிரமணியனை கண்டித்து வரும் 24ம் தேதி சாலை மறியல் நடத்தப் போவதாக டிஜிட்டில் போர்டு வைத்தனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது,
ஊராட்சி தலைவர்கள் வைத்த அந்த போர்டில் எட்டயபுரம் தாலுகா ராமனூத்து மஜராவில் உள்ள சர்வே எண் 5 நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டு சுமார் 38 ஆண்டுகளாக அந்த நிலங்களை சீர்படுத்தி விவசாயம் செய்து வந்த விவசாயிகளுக்கு முதலில் 1995ம் ஆண்டு நில ஒப்படைப்பு பட்டா கொடுத்து பின்னர் 2005ம் ஆண்டு கண்ணி பட்டா கொடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட விவசாயிகளை மிரட்டி நிலமோசடி கும்பல் விதிமீறல் மூலம் சுமார் 80 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்துள்ளது.
விவசாயிகளின் உச்சவரம்பு பட்டா விசாரணை என்கிற பெயரில் நிலமோசடி கும்பலுடன் சேர்ந்து இணை ஆணையர் பாலசுப்பிரமணியன் நிலங்களை அபகரிக்க முயற்சி செய்வதை கண்டித்து விவசாயிகளின் சார்பாக பொது மக்களின் ஆதரவோடு வரும் 24ம் தேதி எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருநத்து.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் அந்த போர்டை உடனடியாக அகற்றினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.