நான் இலங்கைக்கு சென்றதை பாராட்டிய கருணாநிதி வைகோவை மட்டும் விமர்சித்தார்: நெடுமாறன்
விழுப்புரம்: நான் இலங்கைக்கு சென்றபோது அதை பாராட்டி எழுதிய கருணாநிதி வைகோவை மட்டும் விமர்சித்தார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் தமிழ் இளைஞர் கூட்டமைப்பின் சார்பில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. கவிஞர் காசி ஆனந்தன் முதல் பிரதியை வெளியிட அதனை ஓய்வு பெற்ற தலைமையாசிரியை பார்வதி அம்மாள் பெற்றுக் கொண்டார்.
பின்னர் பழ. நெடுமாறன் தனது ஏற்புரையில் கூறுகையில்,
முள்ளிவாய்க்கால் போரோடு அனைத்தும் முடிந்துவிட்டது. இனி தமிழ் ஈழமே இல்லை என்பது போன்ற பிரமையை சிங்கள அரசும், இந்திய அரசும் சேர்ந்து ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முள்ளிவாய்க்காலில் இருந்து தான் வரலாறு மீண்டும் தொடங்கும் என்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.
தமிழக அரசியல் திரை கவர்ச்சியால் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு லட்சிய பாடத்திற்கு பதில் பணம் மற்றும் பதவி வெறி ஊட்டப்பட்டுள்ளது. இன்றைய இளைஞர்கள் லட்சியம் இல்லாமல் திசை திருப்பப்பட்டு ஏதேதோ செய்வதைப் பார்க்கிறோம். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களுக்கு லட்சியப் பாதை வகுத்தவர் பிரபாகரன். தமிழகம் லட்சிய பாதைக்கு திரும்ப இந்நூல் பெரிதும் உதவும்.
இதுவரை வெளியே வராத பல செய்திகள் இந்நூலில் உண்டு. இதில் உள்ள பிரபாகரனின் கடிதங்கள் எனக்கு எழுதப்பட்டவை கிடையாது. அது தமிழக இளைஞர்களுக்கு எழுதப்பட்டவை ஆகும். தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் வேலூர் கோட்டையில் இருந்து சுரங்கம் தோண்டி வெளியேறியது எப்படி உள்ளிட்ட கடிதங்கள் இந்நூலில் உள்ளது.
1975ல் நான் இலங்கைக்கு சென்றபோது திமுக தலைவர் கருணாநிதி என்னைப் பாராட்டி முரசொலியில் அதுவும் முதல் பக்கத்தில் எழுதியிருந்தார். ஆனால் வைகோ இலங்கைக்கு சென்றபோது அதை அவர் விளம்பரத்திற்காக செய்கிறார் என்று அவர் எழுதினார் என்றார்.