உடன்குடி அருகே பைபிள் வழங்கிய பள்ளி முற்றுகை
தூத்துக்குடி: உடன்குடி அருகே பைபிள் வழங்கியதாக பஞ்சாயத்து யூனியன் பள்ளியை இந்து முன்னணியினர், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள கொட்டங்காடு இடைச்சிவிளையில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த 15ம் தேதி மாலை தூத்துக்குடி கிடியான் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பைபிள் வழங்கப்பட்டது. இதனை மாணவர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இதை கண்டித்து மறுநாள் காலை பெற்றோர்கள் மற்றும் இந்து முன்னணியினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் பால் ஐசக், வி.ஏ.ஓ. செல்வராஜ் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடுஏற்படவில்லை. மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதாக கூறினர். இதையடுத்து திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் இசக்கி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி மாணவர்களிடம் வழங்கப்பட்ட பைபிள்களை வாங்கி உடன்குடி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பதாக கூறினார். இதையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.