குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப்புக்கு சிபிஎம் ஆதரவு! தேர்தலை புறக்கணிக்கிறது சிபிஐ!
குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தேர்வில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதலில் கலகத்தை சந்தித்தது. மமதா தனி ஆவர்த்தனம் செய்தார். பின்னர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படுவதாக அறிவித்தது. பிரணாப்பை எதிர்த்து யாரை ஆதரிப்பது என்ற முடிவை எடுக்காமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தவித்தது. கலாமை நிறுத்தப் பார்த்த முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் சங்மாவை ஆதரிக்க பாரதிய ஜனதா, அகாலி தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை மட்டும் முன்வந்தன. சிவசேனாவும், ஐக்கிய ஜனதா தளமும் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, பார்வார்டு ஃப்ளாக் ஆகியவை இன்று மாலை முடிவெடுப்பதாக அறிவித்திருந்தனர். இன்று காலை இந்தக் கட்சிகளின் செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடைபெற்றது. பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியில் இடதுசாரிகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பி.ஏ.சங்மாவை எந்த ஒரு இடதுசாரிக் கட்சியும் ஆதரிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. அதே நேரத்தில் பிரணாப் முகர்ஜியை மார்க்சிஸ்ட் மற்றும் ஃபார்வார்டு பிளாக் மட்டும் ஆதரிக்க முன்வந்திருக்கின்றன. ஆனால் இடதுசாரிகள் அணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியும் பிரணாப்பை ஆதரிக்க மறுத்துவிட்டன. இரண்டு கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரான டி. ராஜா கூறியுள்ளார்.