....அப்படீன்னா, சங்மா மகள் கதி என்ன?
குடியரசுத் தலைவர் தேர்தல் வந்தாலும் வந்தது, இந்த எதிர்பார்ப்புகளுக்கு குறைச்சலே இல்லாமல் போய் விட்டது. அப்படி நடக்குமா, இப்படி நடக்குமா, அவரா, இவரா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் வந்து போய் விட்டன. இப்போது புதிதாக ஒரு எதிர்பார்ப்பு வந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக, பிஜூ ஜனதாதளத்தின் ஆதரவுடன் போட்டியிடுவதாக அறிவித்துள்ள பி.ஏ.சங்மா தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சோனியா காந்தி இத்தாலிக்காரர் என்று பிரச்சினையைக் கிளப்பி காங்கிரஸிலிருந்து சரத் பவார் உள்ளிட்டோர் வெளியேறியபோது கூடவே வந்தவர்தான் சங்மா.
இப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் திடீரென அவர் குதித்ததால் தற்போது காங்கிரஸுடன் கூட்டணியாக இருக்கும் பவாருக்கு சிக்கலாகி விட்டது. போட்டியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால் சங்மா கேட்கவில்லை. நானா போட்டியிடுகிறேன், நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் அத்தனை பேரின் சார்பிலும் நான் நிற்கிறேன் என்று டபாய்த்தார்.
இந்த நிலையில் தற்போது அவராகவே கட்சியை விட்டு போய் விட்டார். இதனால் பவாருக்கு பிரஷர் குறைந்து நிம்மதியாகியுள்ளது.
இந்த இடத்தில்தான் இன்னொரு கேள்வி பிறக்கிறது. சங்மாவின் மகள் அகதா சங்மா மத்திய அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சராக இருக்கிறார். இவரது பதவி பறிபோகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தந்தைக்கு இவர் ஆதரவு தெரிவித்தால் இவரை கட்சியை விட்டு நீக்கும் நிலை பவாருக்கு ஏற்படலாம். மேலும் காங்கிரஸும் இவரது பதவியைப் பறிக்கும்.
அதேசமயம், தந்தையை ஆதரிக்காமலும் அகதாவால் இருக்க முடியாது. எனவே அகதாவின் நிலை, அவர் குறித்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸின் நிலைப்பாடு பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம் போல, பொறுத்திருந்து பார்ப்போம்....!