24ல் கவிஞர் கண்ணதாசனின் 85வது பிறந்தநாள் விழா கொண்டாடும் தமிழக காங்கிரஸ்

முத்தையா என்ற இயற்பெயரைக் கொண்ட கவிஞர் கண்ணதாசன் சிவகங்கை மாவட்டம், சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி தன வணிகர் மரபில் பிறந்தார். தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் ஆவார். 4,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 5,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.
சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றியவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட கவிஞர் கண்ணதாசனின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான ஆலோசனை கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. வரும் 24ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் கண்ணதாசனின் 85வது பிறந்தநாள் விழா ‘தேசிய கவிஞனுக்கு தேசிய இயக்கம் நடத்தும் பிறந்த நாள் விழாவாக' கொண்டாடப்பட உள்ளது.
இந்த விழாவில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகர் சிவக்குமார், பாடலாசிரியர் பிறைசூடன், கண்ணதாசன் மகள் விசாலி கண்ணதாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். அன்று மாலை 5.30 மணிக்கு கண்ணதாசனின் திரைப்பட பாடல்கள் சுமார் ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications