ராஜபக்சேவின் மிரட்டல் பேச்சு- தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை தேவை- கருணாநிதி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை கடல் பரப்பில் தமிழக மீனவர்களைக் கைது செய்தால் இனி 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளதுபோல இலங்கை அதிபர் ராஜபக்சே பேசியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு முறையான நடவடிக்கைகள் எடுத்து தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முன் வரவேண்டும்.
தானே புயல்
தானே புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் சாலைகளைச் செப்பனிட டெண்டர் விட்டதில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. "புயலால் பாதிப்படைந்த சாலைகளை மிகவும் விரைவாக சீர்செய்ய வேண்டும் என்பதுதான் நெடுஞ்சாலைத் துறையின் உண்மையான நோக்கமாக இருக்குமேயானால், 106 சாலைப் பணிகளையும் 106 ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் 12 ஒப்பந்ததாரர்களிடம் மட்டுமே பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்ட சாலைப் பணிகளில் பல குறைபாடுகள் இருப்பதை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு கண்டறிந்துள்ளது. எனவே, நிபுணர் குழு சுட்டிக் காட்டியுள்ள குறைபாடுகளை தங்கள் சொந்த செலவில் சரி செய்யுமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற பல பணிகளை ஒட்டுமொத்தமாக சில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே வழங்குவதை அரசு தவிர்க்க வேண்டும்' என்று தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கூறியிருக்கின்றனர். இதுதான் திமுகவின் கருத்தும்.
அமைச்சர்களுக்கு ஏழரை கமிஷன்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்துக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும்போது அதிகாரிகள், தொடர்புடைய அமைச்சர்களுக்கு மாதம் ஏழரை சதவீதம் கமிஷன் கொடுத்து வருவதாக தகவல் வருகின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களைக் கண்டித்த முதல்வர் ஜெயலலிதா இந்தப் பிரச்னையில் என்ன சொல்வாரோ தெரியவில்லை என்று கருணாநிதி கூறியுள்ளார்.