வாட்டர் பாட்டிலின் விற்பனை 3 ஆண்டுகளில் ரூ15 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்
ஆண்டுக்கு 19 விழுக்காடு வளர்ச்சியுடன் தற்போது ரூ.8,000 கோடி சந்தை மதிப்பினை கொண்டுள்ள இத்துறை, 2012-2013-ம் ஆண்டில் ரூ.10,000 கோடியை எட்டும் என தெரிகிறது. சர்வதேச அளவில் கடந்த 5 ஆண்டுகளில் இத்துறை 40-45 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. தற்போதைய சந்தை மதிப்பு 9,000 கோடி டாலர் (ரூ.4.95 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
மினரல் வாட்டர் சந்தையில் 80 விழுக்காடு நிறுவனங்கள் அமைப்பு சார் துறையிலும், 20 விழுக்காடு நிறுவனங்கள் அமைப்பு சாரா துறையிலும் உள்ளன. இந்த நிலையில், அகில இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நிறுவனங்களின் விற்பனை ரூ.4,000 கோடியாகவும், மாநிலங்கள் அளவில் இயங்கி வரும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2,000 கோடியாகவும், அமைப்பு சாரா நிறுவனங்களின் விற்பனை ரூ.1,600 கோடியாகவும் உள்ளது.
அதேநேரம், பிராண்டுகளின் அடிப்படையில் தேசிய அளவில் பிரபலமான பிஸ்லரி (36 விழுக்காடு), கின்லி (25விழுக்காடு) மற்றும் அக்குவாஃபினா (15விழுக்காடு) ஆகியவை அதிக சந்தை மதிப்பை கொண்டுள்ளன. பெய்லி, கிங்ஃபிஷர் மற்றும் மேக்டோவெல் போன்ற பிராண்டுகளின் சந்தை மதிப்பு குறிப்பிடும்படியாக இல்லை.
இத்துறையில் சுமார் 2,500 பிராண்டுகள் தற்போது உள்ளன. இவற்றில் ஏறத்தாழ நான்கில் மூன்று பங்கு உள்ளூர் தயாரிப்புகளாக உள்ளன.
வீடுகள் மற்றும் அலுவலகங்களின் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தற்போது 40 விழுக்காடு சந்தை பங்கினை கொண்டுள்ள 5 லிட்டர் தண்ணீர் பாட்டில்களின் விற்பனை அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் 50 விழுக்காடு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாட்டில்குடிநீர் தென் மாநிலங்களில்தான் அதிகம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.