போதை, செக்ஸ்... சீரழியும் மாணவ சமுதாயம் : அதிர்ச்சி தகவல்
போதைப்பொருள், அதை பயன்படுத்துபவரை மட்டும் பாதிப்பதில்லை. அவரது குடும்பம், சமுதாயத்தையும் பாதிக்கிறது. அனைத்து வகையான நோய்களுக்கும் முன்னோடியாக இருப்பது போதைப்பொருள் தான். ஆனால் இளையதலைமுறையினர் பலரும் இன்றைக்கு அடிமையாகி வருகின்றனர் கவலைக்குரியது.
அந்த போதையின் பாதையில் இருந்து மீள வழி தெரியாமல் அதில் மூழ்கிப் போவோர் பலர் இருக்கின்றனர். அவர்களை காப்பதற்காகவே பெங்களூரில் அபயம் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார் பி.ஜெ. ஆல்பர்ட். இவர் போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் மையத்தை நடத்தி வருகிறார்.
பெங்களூரைச் சேர்ந்த இளைஞன் அர்ஜூன் பார்க்க அழகானவன், வசதி படைத்தவன். அவன் காரில் வருவதைப் பார்த்தலே பொறாமையால் பொசுங்குபவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவனோ தலை குனிந்தபடி அபயம் இல்லத்தை தேடி செல்கிறான். அதற்குக் காரணம் அவனது போதை, செக்ஸ் பழக்கம்தான். அவன் தொடர்பு வைத்திருந்த பெண்ணிற்கு 13 வயதிலேயே போதை பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் போதைக்காக எதையும் செய்ய துணிந்து செயல்படுகிறாள். அவளுடன்தான் அர்ஜூனுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது எப்படியோ அங்கிருந்து மீண்டு மறுவாழ்வு மையத்தை அடைந்திருக்கிறான்.
அர்ஜூனைப் போன்ற இளம் சிறார்கள் போதைக்கு அடிமையாவதோடு பாதுகாப்பற்ற உடலுறவிலும் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் ஆல்பர்ட் கூறியுள்ளார். பெங்களூருவில் நடத்திய கணக்கெடுப்பின்படி 70 சதவிகித மாணவர்கள் செக்ஸ் பற்றி தெரிந்திருக்கிறார்கள். உடல் ரீதியாக அதை உணர்ந்தும் இருக்கிறார்கள். இது போன்ற பாதுகாப்பற்ற உறவினால் பெரும்பாலோனோர் எய்ட்ஸ் போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர் என்றும் ஆல்பர்ட் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கு போதை மருந்து பற்றியும், செக்ஸ் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.