சிங்கள ராணுவத்திடமிருந்து தப்பி இங்கிலாந்தில் கொலையான ஈழத் தமிழர்
லண்டன்: இலங்கையில் இருந்து தப்பித்து ஜெர்மனியில் தஞ்சம் புகுந்து இங்கிலாந்துக்கு சென்ற ஈழத் தமிழரை சிறுவர் கும்பல் ஒன்று தாக்கியதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இலங்கையைச் சேர்ந்தவர் பொன்னுதுரை நிமலராஜா (41). அவர் இலங்கையில் ராணுவத்தினரின் கொடுமை தாங்க முடியாமல் அங்கிருந்து தப்பித்து ஜெர்மனியில் கடந்த 1993ம் ஆண்டு தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு குடும்பத்தோடு இங்கிலாந்தில் குடியேறினர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி லெஸ்டரில் உள்ள ஈஸ்ட் மிட்லேண்ட்ஸ் டவுனில் அவருக்கும், சிறுவர்கள் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிறுவர்கள் அவரை கடுமையாகத் தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஒரு வாரம் கழித்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதையடுத்து கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் 6 சிறுவர்கள் மற்றும் 14 வயது சிறுமியைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இது குறித்து பொன்னுதுரையின் மனைவி மதனிகா நிமலாராஜா கூறுகையில்,
இலங்கையில் ராணுவ முகாமில் எனது கணவரை ராணுவ வீரர்கள் அடித்து உதைத்தனர். இதையடுத்து அவர் கொழும்புக்கு சென்றார். ஆனால் அது பாதுகாப்பான இடம் இல்லை என்பதால் கடந்த 1993ம் ஆண்டு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்தார். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக இங்கிலாந்து வந்தோம் என்றார்.
இந்த கொலை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் அதை தெரிவிக்குமாறு அந்த சிறுவர்களின் பெற்றோரை மதனிகா கேட்டுக் கொண்டுள்ளார்.