மதுரை ஆதீன மடத்தில் போலீஸார் அதிரடி சோதனை!
மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக்கண்ணன் இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், நான் கடந்த மே மாதம் மதுரை ஆதீன மடத்திற்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே போய்ப் பார்த்தபோது எனக்கும் அங்கிருந்தவர்களுக்கும் போதை கலந்த நீரைக்கொடுத்து குடிக்கச் சொன்னார்கள்.
அதன் பின்னர் நித்தியானந்தா, மதுரை ஆதீனம், நடிகை ரஞ்சிதா, வைஷ்ணவி மற்றும் அங்கிருந்த ஆண்களும், பெண்களும் ஆபாச நடனம் ஆடினர். ஆங்கிலப் பாடல்களையும், தமிழப் பாடல்களையும் ஒலிக்க விட்டு நடனமாடினர்.
மேலும் அங்கு ஏராளமான புலித் தோல்களும், யானைத் தந்தங்களும் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து விளக்குத்தூண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வம், இந்த புகாரில் முகாந்திரம் இருப்பதாக தெரிகிறது. ஏன் ஏழக்குப் பதிவு செய்யப்படவில்லை. நீங்கள் பதிவு செய்கிறீர்களா அல்லது நானே பதிவு செய்யட்டுமா என்று விளக்குத்தூண் காவல்துறையினரிடம் கோபத்துடன் கேட்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.
அதன்படி தற்போது நித்தியானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி உள்ளிட்டோர் மீது வனத்துறை பாதுகாப்புச் சட்டத்தின் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த விளக்குத்தூண் போலீஸார் இன்று ரெய்டில் குதித்தனர்.
இன்ஸ்பெக்டர் கதிர்வேல தலைமையில் போலீஸார், கிராம நிர்வாக அதிகாரி, வீடியோகிராபர் உள்ளிட்டோர் அடங்கிய 10க்கும் மேற்பட்ட போலீஸார் உள்ளே புகுந்து சோதனை போட்டு வருகின்றனர். சோதனை முழுவதும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது.