புருஷன் கட்டிய தாலியை தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் இப்படித்தான் ஆகும்!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள மையநாடு பகுதியைச் சேர்ந்தவர் லத்தி. இவர் தனது வீட்டில் பாமரேனியன் நாய் வளர்த்து வருகிறார். ஜானி என்று பெயரிடப்பட்ட அந்த நாய், எப்போதும் தனது எஜமானியுடன் அவருடைய படுக்கையில்தான் படுத்துத் தூங்குமாம்.
தூங்குவதற்கு முன்பு தனது தாலியை கழற்றி தலையணைக்கு அடியில்வைத்து விடுவார் லத்தி. அதேபோல சம்பவதன்றும் தாலியைக் கழற்றி வைத்து விட்டு தூங்கினார். அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தபோது தாலியைக் காணவில்லை. அது துண்டு துண்டாக கிடந்தது. தாலியின் சில பகுதிகளைக் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர் அங்குமிங்கும் தேடிப் பார்த்தார். அப்போது நாயின் வாயில் ஒரு தாலித் துண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகுதான் தெரிந்தது, தாலியை நாய் கவ்வி குதறிப் போட்டது.
இதையடுத்து முதலில் விளக்கெண்ணெய் கொடுத்தனர் நாய்க்கு. இதனால் நாய்க்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டு தாலித் துண்டுகள் சில வெளியே வந்தன. பின்னர் கால்நடை மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினர். வழியில் ஆட்டோவிலேயே நாய் வாந்தியெடுத்து மேலும் சில துண்டுகள் வாய் வழியே வந்தன.
டாக்டர்களிடம் கொண்டு சென்று காட்டினார் லத்தி. நாய்க்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் சில தாலித் துண்டுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அறுவைச் சிகிச்சைக்கு முடிவு செய்யப்பட்டது.
அதன் பின்னர் நாயைப் படுக்க வைத்து ஆபரேஷன் தொடங்கியது. கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தாலித் துண்டுகள் அத்தனையும் பத்திரமாக மீட்கப்பட்டன.
புருஷன் கட்டிய தாலியை கழுத்தில் மாட்டால் இப்படி தலையணைக்கு அடியில் புதைத்து வைத்தால் நாய்தான் கவ்விக்கிட்டுப் போகும், பெண்களே, உஷார்...!