நிலம் ஆக்கிரமிப்பு: பிரான்சு பாராளுமன்றம் முன்பு ஈழ தமிழர்கள் போராட்டம்
இலங்கையில் ஈழத்தமிழர்களின் வீடுகள், நிலத்தை சிங்களவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து பிரான்சு பாராளுமன்றம் முன்பு ஈழத்தமிழர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள் அனைவரும் ராணுவத்தின் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் அடையாள சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் பகுதிகளில் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு ராணுவத்தால் அபகரிக்கப்பட்டு அங்கு சிங்களர்கள் குடியமர்த்தப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை சார்பில் பாரீசில் உள்ள அந்நாட்டின் பாராளுமன்றம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழீழ மக்கள் பேரவை தலைவர் திருகோதி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். பிரான்சில் தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த நேரத்தில் கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆர்பாட்டத்தின் போது பேசிய திருச்சோதி, எமது மண் எமக்கு வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான இலாபம் முதல் அம்பாறை வரை நிலங்கள் தமிழர்களிடம் ஒப்படைக்கபட வேண்டும். அதை இலங்கை செய்யாத பட்சத்தில் தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் ஒவ்வொரு வாரமும் பிரான்சு பாராளுமன்றம் முன் நடைபெறும் என்று கூறினார்.
மேலும் பிரான்சு வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழீழ மக்களின் இன்றைய நிலையை கடிதம் மூலம் விளக்கி பிரான்ஸ் அரசாங்கம் ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.