இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்-தமிழக மத தலைவர்கள் கண்டனம்
கொழும்பு: இலங்கையில் உள்ள இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் வழிப்பாட்டு தலங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு, தமிழக மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்து, கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் வழிப்பாட்டு தலங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சில மத குருமார்களுக்கு மிரட்டலும், தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்று வரும் இச்சம்பவத்திற்கு, தமிழகத்தை சேர்ந்த மதத் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கத்தோலிக்க ஆர்ச் பிஷப் ஏ.எம்.சின்னப்பா, போராசிரியை சரஸ்வதி, இந்தியன் தெளஹீத் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பாகர், தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஐதர் அலி, தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா உள்ளிட்ட பல மத தலைவர்கள் கூட்டாக சேர்ந்து சென்னையில் பேட்டி அளித்தனர்.
பேட்டியின் போது அவர்கள் கூறியதாவது,
இலங்கையில் நடைபெற்ற போருக்கு முன்னும், போருக்கு பின்னும் ஈழத்தமிழர்களை கொன்று குவிப்பதோடு அவர்களின் பண்பாட்டு அடையாளங்களை முற்றிலும் அழிப்பதில் இலங்கை அரசு வெறிகொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்துக்களின் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் தொடர்ந்து தகர்க்கப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ தேவாலயங்களை தாக்கி தகர்ப்பதோடு கத்தோலிக்க குருமார்களை கடத்தி சென்று கொலை செய்து விடுகின்றனர்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்புக்கு இலங்கை அரசு மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது. இலங்கை அரசின் அடக்கு முறைகள் மற்றும் உரிமை மீறல்களை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
ஈழ தமிழர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் கடமை, தமிழகத்தில் வாழும் தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. இலங்கையில் இனி தமிழர்கள் வாழ வாய்ப்பு இல்லை.அனைத்து மதத்தினரும் நம்பிக்கை இழக்கும் வகையில் கோவில்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன. இது ஒரு பயங்கரவாத சம்பவமாகும்.
மதம், மக்கள், கலாச்சாரம் ஆகியவற்றிற்கு எதிரான சம்பவங்கள் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த பயங்கரவாதத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைவர்கள் இதற்கு குரல் கொடுக்க, ஒன்று சேர வேண்டும்.
இது குறித்து ரோமில் உள்ள போப் ஆண்டவருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். பன்னாட்டு சபையும் உடனடியாக தலையிட்டு, இந்த பிரச்சனையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம் என்றனர்.