ரூ.50,000 லஞ்சம் வாங்கிய திருச்சி பத்திரப்பதிவு அலுவலக அதிகாரி கைது
திருச்சி: திருச்சி பத்திரப்பதிவு அலுவலக இணை பதிவாளர் ஜெயப்பிரகாஷ் ரூ.50,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் வீடு வாங்குவது, விற்பது தொடர்பான பத்திரங்களை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த அலுவலகத்தில் எப்பொழுதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இதனை பயன்படுத்தி அதிகாரிகள் அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் அதிக அளவு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதையடுத்து இந்த அலுவலக செயல்பாட்டை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இணை பதிவாளர் ஜெயப்பிரகாஷ் என்பவர் பயனாளி ஒருவரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கும் போது அருகில் மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சிலம்பரசன் தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாகப் பிடித்தனர்.
ஜெயப்பிரகாஷுக்கு உதவியாக இருந்த அலுவலக உதவியாளர் செல்வமணியும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அதிகாரி ஜெயப்பிரகாஷ் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து ஜெயப்பிரகாஷிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.