மும்பையில் கொட்டித் தீர்த்த பருவமழை- போக்குவரத்து கடும் பாதிப்பு- மழை தொடரும் என எச்சரிக்கை
மும்பை: மும்பையில் வெளுத்துக் கட்டிய மழையால் இன்று இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மும்பையில் நேற்று இரவு முதல் காலை வரை மழை கொட்டித் தீர்த்தது. மும்பையின் சாண்டாகுரூஸ் பகுதியில் மிக அதிபட்சமாக 75 மிமீ மழையும் கொலாபாவில் 21 மிமீ மழையும் பதிவாகி இருந்தது.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் மிகக் கடுமையாக இருந்தது. வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்லத்தான் முடிந்தன ரயில்கள் அனைத்தும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதாகவே சென்றடைந்தன.
கடந்த 10-ந் தேதியே எதிர்பார்க்கப்பட்ட மழை நேற்றுதான் கொட்டியது. இதனால் மும்பை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ள நீரில் மிதக்கின்றன. மேலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மும்பை மற்றும் கொங்கண் பகுதியில் கன மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில்...
கத்திரி வெயில் முடிந்த பிறகும் கூட சென்னை நகரம் 100டிகிரி வெப்பநிலையை எதிர்கொண்டே வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக மாலை நேரங்கள் இதமாக இருக்கின்றன. குளிர்ந்த காற்றும் சில நேரங்களில் மழைத் தூறலும் இருந்து வருகிறது. சென்னை நகரிலும் நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மொத்தம் 4 மில்லி மீட்டர் மழை சென்னை நகரில் பதிவானது.
சில இடங்களில் பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது
இதேபோல் தேனி, நீலகிரி, சேலம், கோவை மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.