சங்மாவுக்கு ஆதரவாகப் பேசிய காங்கிரஸ் எம்.பி. அரவிந்த் நேதம் சஸ்பெண்ட்
டெல்லி: குடியரசுத் தேர்தலில் போட்டியிடும் சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. அரவிந்த் நேதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 19ம் தேதி நடக்கவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவில் பழங்குடியினத் தலைவர் சங்மாவும் போட்டியிடுகின்றனர். பிரணாபும், சங்மாவும் நேற்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து சங்மா பேசினார்.
அப்போது சத்தீஸ்கர் மாநில மூத்த பழங்குடியினத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான அரவிந்த் நேதம் அவருடன் இருந்தார். மேலும் நேதம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்திய பழங்குடியின மன்றத்தின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக சங்மா இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. அம்மன்றம் பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து சங்மாவுக்கு ஆதரவு கோரி வருகிறது. ஆனால் காங்கிரஸ் தான் எதுவும் கூறவில்லை என்றார்.
காங்கிரஸில் இருந்து கொண்டு சங்மாவை ஆதரித்து நேதம் பேசியதை டிவியில் பார்த்த காங்கிரஸ் கொதித்துவிட்டது. நாம் பிரணாபை வெற்றி பெறச் செய்ய பாடுபட்டுக் கொண்டிருக்கையில் இவர் எப்படி சங்மாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று கடுப்பாகிவிட்டது. இதையடுத்து முதல் வேளையாக நேதம் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.