தனியாக வசிக்கும் மூதாட்டிகள் கொலை: பாதுகாப்பு கோரி 850 முதியவர்கள் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மனு
சென்னை: சென்னையில் வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்கள் 850 பேர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
சென்னையில் வீட்டில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் கொன்று வீட்டில் உள்ள நகை, பணம் கொள்ளையடிக்கப்படுவது தொடர் கதையாகிவிட்டது. இதையடுத்து தனியாக வசிக்கும் மூதாட்டிகளைக் காக்க போலீசார் தனி கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் தனியாக வசிக்கும் பெண்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி அல்லது செல்போன் எண்ணை காவல் நிலையங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் தனியாக வசிக்கும் 850 முதியவர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்புக் கோரி மனு கொடுத்துள்ளனர். ஆனால் வடசென்னை பகுதியில் மட்டும் குறைவான பேர்களே மனு கொடுத்தனர்.
தனியாக வசிக்கும் முதியவர்களை ரோந்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சில சமயம் அவர்களின் வீட்டுக் கதவை தட்டி பாதுகாப்பாக உள்ளீர்களா, ஏதேனும் குறையுண்டா என்றும் கேட்கிறார்கள். மேலும் அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்களின் கண்காணிப்பில் முதியவர்கள் உள்ளனர். இது தவிர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றிலும் இருந்தும் முதியவர்களுக்கு போன் செய்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா, உங்கள் வீட்டுக்கு போலீசார் வருகிறார்களா? என்று கேட்கின்றனர்.
போலீசார் என்னதான் தீவிரமாக கண்காணித்தாலும் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற நிலை மாற வேண்டும். தங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் பிள்ளைகளும் அக்கறை காட்ட வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்பு விஷயங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும். யாராவது கதவைத் தட்டினால் யார் வந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்த பிறகே கதவைத் திறக்க வேண்டும். இது போன்று எச்சரிக்கையாக நடந்து கொண்டால் கொலை சம்பவங்களைத் தடுக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications