மிரட்டும் '2ஜி ஆவி': ஸ்பெக்ட்ரம் ஏல குழு தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் ராஜினாமா!
டெல்லி: தொலைத் தொடர்பு துறை தொடர்பான மத்திய அமைச்சர்கள் குழுத் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகிவிட்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
தொலைத் தொடர்பு துறை தொடர்பான அமைச்சர்கள் குழுவுக்கு மத்திய நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி தலைவராக இருந்தார். அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால், பதவி விலகினார். இதையடுத்து, அந்த குழுவுக்கு மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவாரை பிரதமர் தலைவராக நியமித்தார்.
இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் ஏலம் உள்பட தொலைத் தொடர்பு துறையின் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விவாதிக்க குழுவின் கூட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென இக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இதற்கிடையே அந்த குழுவின் தலைவர் பதவியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமருக்கு சரத் பவார் நேற்று மாலை பிரதமருக்கு கடிதம் அனுப்பிவிட்டார்.
அந்தக் கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் என் பெயரை தேவையில்லாமல் இழுக்க முயற்சிகள் நடந்தன. அந்தக் குற்றச்சாட்டுக்கள் தவறானவை. தவறான நோக்கம் கொண்டவை. அவற்றை நான் ஏற்கனவே மறுத்து விட்டேன்.
நான் தனிப்பட்ட முறையிலோ, பதவியைக் கொண்டு அதிகாரப்பூர்வமாகவோ ஸ்பெக்ட்ரம் உரிமம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட்டதே இல்லை.
எனவே இத்தகைய சூழ்நிலையில், தொலை தொடர்பு துறைக்கான குழுவின் தலைவர் என்ற முறையில், முடிவு எடுக்கிற நிலையில், வீணான சக்திகள் என் பெயரை சர்ச்சைக்கு உட்படுத்தும் என நம்புகிறேன்.
எனவே அந்த குழுவின் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவித்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும் என கருதுகிறேன் என்று கூறியுள்ளார் சரத் பவார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனம் உரிமம் பெற்று, லாபம் அடைந்ததில் சரத் பவாருக்கும் தொடர்பு உண்டு என்று குற்றச்சாட்டு எழுந்தது நினைவுகூரத்தக்கது.
சரத்பவாரின் ராஜினாமாவை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டதாக அரசு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பவாருக்குப் பதிலாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா இந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.