அதிமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து 6ம் தேதி செஞ்சியில் உண்ணாவிரதம்: விஜயகாந்த் அறிவிப்பு
சென்னை: நந்தன் கால்வாய் திட்டத்தில் மெத்தனமாக இருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 6ம் தேதி செஞ்சியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை தாலுகா சம்மந்தனூர் துரிஞ்சல் ஆற்றின் குறுக்கே உள்ள 13வது அணைக்கட்டான கீரனூர் அணைக்கட்டில் இருந்து இடதுபுறமாக கால்வாய் வெட்டி அதன் மூலம் தண்ணீரை திருப்பி திருவண்ணாமலை தாலுகாவில் 14 ஏரிகளுக்கும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் 10 ஏரிகளுக்கும், விழுப்புரம் தாலுகாவில் 12 ஏரிகளுக்குமாக மொத்தம் 36 ஏரிகளுக்கு நீர்வரத்து அளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட திட்டம் நந்தன் கால்வாய் திட்டம்.
இதன் மூலம் திருவண்ணாமலை தாலுகாவில் 1566.20 ஏக்கரும், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 5088.18 ஏக்கருமாக மொத்தம் 6654.38 ஏக்கர் நிலமும் பாசனவசதி பெறுகிறது. ஆனால் 1977-78-ம் ஆண்டில் ஏற்பட்ட எதிர்பாராத வெள்ளத்தால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் வந்த ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்டத்திலும், விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ள ஏரிகள் நிரப்பப்படுவதில் சிரமம் ஏற்பட்டது.
1997-98-ல் உலக வங்கி நிதி ஆதாரம் பெற்று ரூ.109 லட்சம் செலவில் கால்வாய் நவீனப்படுத்தப்பட்டது. இருப்பினும் நவம்பர் 2004-ல் ஏற்பட்ட வெள்ளநீரை இந்த கால்வாய் மூலம் கொண்டு செல்ல முடியவில்லை. அவ்வப்போது நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே தவிர அந்த பணியால் எந்த பயனும் ஏற்படவில்லை.
தற்போது இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த சுமார் 14 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிய வருகிறது. தொடர்ந்து ஆட்சிகள் மாறிக்கொண்டு இருந்தாலும் அந்த பகுதி விவசாயிகளின் கண்ணீரை துடைக்க நந்தன் கால்வாய் தண்ணீர் இதுவரை வந்தபாடில்லை. கடந்த நிதியாண்டில் இதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
எனவே தமிழக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்தும், நந்தன் கால்வாய் திட்டத்திற்கான நிதியை உடனடியாக ஒதுக்கி பணியை மேற்கொள்ள வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில் வருகின்ற 6ந் தேதி (வெள்ளிக்கிழமை) செஞ்சியில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமையில், தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கின்றனர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.