கரூரில் தொண்டர்களுக்கு மினி பஸ், நிர்வாகிகளுக்கு சொகுசு பஸ் வைத்து அழைத்துச் சென்ற போலீஸ்
கரூர்: கரூரில் நடந்த திமுக சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதான மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு போலீசார் சொகுசு பஸ் வைத்து அனுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் சுமார் 2,000 முதல் 2,500 திமுகவினர் மட்டுமே கைதாகியுள்ளனர். கரூர் நகர திமுக சார்பில் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அண்ணா நகரில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து சுமார் 1,000 பேர் கரூர் தாலுகா அலுவலகம் நோக்கிச் சென்றனர். அப்போது போலீசார் அவர்களை வழிமறித்து கைது செய்தனர்.
இதில் முன்னாள் கரூர் நகர் மன்ற தலைவர் சிவகாம சுந்தரி தலைமையிலான சுமார் 100 மகளிரணி நிர்வாகிகளும் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்கள் கரூரில் உள்ள காவேரி அம்மாள் திருமண மண்டபம், பாக்கியராஜ் திருமண மண்டபம், வி.என்.சி. மஹால் போன்ற 5 இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக நிர்வாகிகளை கைது செய்து மினி பஸ் மூலமாக திருமண மண்டபத்திற்கு பேலீசார் அனுப்பிவைத்த வண்ணம் இருந்தனர்.
கடைசியில் மாவட்ட மற்றும் நகர முக்கிய திமுக நிர்வாகிகளை அழைத்துச் செல்லும்போது சொகுசு பஸ் வரவழைத்து அவர்களை திருமண மண்டபத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதைப் பார்த்த கட்சி தொண்டர்கள் எங்களை மட்டும் மினி பஸ்ஸில் ஆடு, மாடு போல் அடைத்து வைத்து அழைத்து வந்தீர்கள். ஆனால் நிர்வாகிகளை மட்டும் சொகுசு பஸ் வைத்து அழைத்து வருவதா என கொந்தளித்தனர்.
இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கைதான திமுகவினர் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications