மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் ஜிலானி
டெல்லி: மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கான தொடர்புகள் அத்தனையையுமே அண்மையில் பிடிபட்ட அபு ஜிண்டால் ஒப்புவித்த நிலையிலும்கூட வழக்கம்போல எங்களுக்கு எந்தத் தொடர்புமே இல்லை என்று பல்லவியை மீண்டும் பாடியிருக்கிறது பாகிஸ்தான் நாடு.
பாகிஸ்தான், இந்தியா இடையேயான வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாட்டு செயலர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுச் செயலாளர் ஜிலானி கூறியதாவது:
இருநாடுகளிடையே பரஸ்பர நல்லுறவையும் அமைதியையும் ஏற்படுத்துவது குறித்து 2 நாள் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதம் என்பது பொது எதிரி. இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கக் கூடாது என்பது எங்களது நிலைப்பாடு.
இந்தியாவும் பாகிஸ்தானும் பக்கத்து நாடுகள் மட்டுமல்ல. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளும் கூட. இரண்டு தரப்பினருக்கும் இடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவது அவசியமாகும். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் மிக தீவிரமாக போராடி வருகிறது. பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் பாகிஸ்தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பாக மிகவும் ஆழமாக இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
அபு ஜிண்டால் குறித்த தகவல்களை பாகிஸ்தானுடன் இந்தியா அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் நாட்டின் எந்த ஒரு அரசு நிறுவனமும் இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும். மும்பை தாக்குதல் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து கூட்டாக விசாரணை நடத்தலாம் என்றார் அவர்.
இச்சந்திப்பில் மத்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாய் கூறியதாவது:
இருநாட்டு வெளியுறவுச் செயலர்களும் பயங்கரவாதம் தொடர்பாக விவாதித்தோம். இருதரப்பிலும் கூடுதல் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். இருநாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்துவதன் மூலம் நல்லுறவு மேம்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரமும் கூட. பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியரான சரப்ஜித்சிங் விடுதலை குறித்தும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது என்றார் அவர்.
டெல்லி பேச்சுவார்த்தைகளையடுத்து செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் இருநாட்டு வெளியுறவுச் செயலர்கள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அப்போது இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேசக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.