ஏனாம் கலவர வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: ஏனாம் கலவர வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க புதுவை அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம், ஏனாமில் ரீஜினல் செராமிக் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவன நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே தொழிற்சங்க தகராறு இருந்து வந்தது.
கடந்த 27.1.2012 அன்று தொழிற்சங்க தலைவர் முரளி மோகன் தலைமையில் நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போலீசார் தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து போகச் செய்தனர். இது தொடர்பாக முரளி மோகனை ஏனாம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி சூறையாடினார்கள். அப்போது நடந்த தகராறில் தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் சந்திரசேகரராவ் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தொழிலாளர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் முரளி மோகனின் மனைவி மச்ச துர்கா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இந்த கலவரம் தொடர்பான வழக்கையும், தனது கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கையும் சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதையே புதுச்சேரி அரசும் தெரிவித்திருந்தது.
இந்த மனு நீதிபதி சுதந்திரம் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த கலவரம் மற்றும் கொலை தொடர்பாக ஏனாம் காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.