இணையதளத்தை ஹேக் செய்து கருத்து கணிப்பு முடிவுகளை பிபிசி மாற்றுகிறது: ஈரான் குற்றச்சாட்டு
டெஹ்ரான்: ஈரானின் அரசு தொலைக்காட்சியின் இணையதளத்தை பி.பி.சி. நிறுவனம் ஹேக் செய்து அணு ஆயுதத் திட்டம் தொடர்பான கருத்துக் கணிப்பு முடிவுகளை மாற்றம் செய்திருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஆனால் பிபிசி நிறுவனம் இதை நிராகரித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கிறது என்று மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஆக்கப்பூர்வ பயன்பாடுகளுக்கே தமது அணு ஆயுதத் திட்டம் என்று வாதிடுகிறது ஈரான்.
இந்நிலையில் ஈரானின் அரசு தொலைக்காட்சிக்கு சொந்தமான இணையதளத்தில் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் ஈரானின் யுரேனிய செறிவூட்டல் 24 விழுக்காடு என்று இருந்ததை பிபிசி நிறுவனம் ஹேக் செய்து 63 விழுக்காடு என மாற்றியிருக்கிறது என்பது ஈரானின் புகார்.
ஆனால் பிபிசி நிறுவனம், ஈரான் அரசு தொலைக்காட்சிதான் முதலில் யூரானின் செறிவூட்டல் விழுக்காடு 63 என்று போட்டுவிட்டு பின்னர் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அதை நீக்கிவிட்டது. பின்னர் 24 விழுக்காடு என்று மாற்றிக் கொண்டது என்று கூறியுள்ளது.
இதேபோல் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடுவது தொடர்பாக ஈரான் அரசு தொலைக்காட்சியின் இணையதளத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் பிபிசி நிர்வாகம் ஹேக் செய்து முடிவுகளை மாற்றியமைத்திருப்பதாக ஈரான் கூறுகிறது.
ஆனால், இதையும் பிபிசி திட்டவட்டமாக மறுத்துள்ளது.