கர்நாடக மாநிலத்தில் டிசம்பரில் பேரவை தேர்தல்- ஆட்சியை பாஜக இழக்கும்?
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு டிசம்பர் மாதமே நடைபெறக் கூடும் எனக் கூறப்படுகிறது. குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில பேரவைத் தேர்தல்களுடன் இணைந்து கர்நாடக பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
தென்னிந்தியாவில் கர்நாடகத்தில்தான் பாஜக ஆட்சியில் முதல் முறையாக அமர்ந்திருக்கிறது. ஆனால் கடந்த 4 ஆண்டுகால ஆட்சியிலும் ஒரே அக்கப்போர்தான்! ஊழல் குற்றச்சாட்டுகளும் கோஷ்டி மோதல்களும் உச்சகட்டமாக அரங்கேறியதும் கர்நாடகத்தில்தான்!இதன் விளைவாகத்தான் ஆண்டுக்கு ஒரு முதல்வர் என்ற ரீதியில் 4 ஆண்டுகளில் 3 முதல்வர்களை சந்தித்திருக்கிறது கர்நாடகம்!
பாஜகவில் ஏற்பட்ட மோதலானது மாநிலத்தில் சாதிய மோதல்களைக் கூர்மைப்படுத்தியும் இருக்கிறது. கர்நாடகத்தில் பெரும்பான்மையினராக இருக்கும் லிங்காயத்துகள் மற்றும் ஒக்கலிகா சமூகத்தின் மோதலாக பகிரங்கமாகவே பாஜக உட்கட்சி மோதல் வெடித்திருக்கிறது. ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த சதானந்த கவுடா, தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது என்பதற்காக ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது கர்நாடக பாஜகவின் வாக்குகளானது லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா என இருபிரிவாகப் பிரிந்து கிடக்கிறது. இதனால் வரும் பேரவைத் தேர்தலில் இது பிரதிபலிக்கும். இந்த உட்கட்சி மோதலின் அறுவடையானது பாஜகவுக்கு பெரும் தோல்வியைத்தான் தரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.