டெசோ மாநாடு குறித்து அவசரம் காட்ட தேவையில்லை- சம்பந்தன்
கொழும்பு: டெசோ மாநாடு ஆகஸ்ட் மாதம்தான் நடக்கிறது. எனவே அதில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்க இப்போதே அவசரம் காட்டத் தேவையில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
திமுக தலைமையிலான டெசோ அமைப்பின் மாநாடு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ்ஈழம் குறித்து தீர்மானம் ஏதும் போடப்படாது என்று கருணாநிதி கூறி விட்டார்.
இந்த நிலையில் இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்குமா என்று இரா. சம்பந்தனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,
இந்த மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. எனவே இது குறித்து கவனமாக ஆராய்ந்து வருகிறோம். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
எனக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதமிழில் இந்த மாநாடு இலங்கையில் தனிநாடு உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல் என குறிப்பிடப்படவில்லை.
வடக்கு கிழக்கில் போதிய சுயாட்சியுடன் சுய மதிப்புடனும் சுய கவுரவத்துடனும் தமிழ் மக்கள் வாழ்வதற்கான உரிமைகள் குறித்த கலந்துரையாடல் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் சம்பந்தன்.