மம்தா மாதிரியே விஜய்காந்தும் பல்டி?!: ஜனாதிபதி தேர்தலில் பிரணாபை ஆதரிக்க முடிவு!?

குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பிரணாப் முகர்ஜிக்கு தேமுதிக ஆதரவளிக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை அல்லது பிரணாப் முகர்ஜி தரப்பில் இருந்து ஆதரவு கோரி கடிதம் வந்தால் அது குறித்து பரிசீலனை செய்யலாம் என விஜயகாந்த் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து தனக்கு ஆதரவுளிக்குமாறு பிரணாப் முகர்ஜியே விஜயகாந்துக்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து தங்களிடம் முறைப்படி ஆதரவு கேட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்துவிட்டு, தற்போது தேமுதிகவை அதிமுக தனிமைப்படுத்திவிட்டதாக விஜயகாந்த் கருதுகின்றார். நண்பர்களாக இருந்த அதிமுகவும் தேமுதிகவும் தற்போது எதிரிகளாக மாறிவிட்டன. மேலும், புதுக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து தேமுதிக களம் இறங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக ஆதரவு வேட்பாளரான சங்மாவை தோற்கடிப்பதன் மூலம் ஜெயலலிதாவை பழி வாங்குவது, பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதன் மூலம் தேசிய அளவில் புதிய கூட்டணியை அமைப்பது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேமுதிக, காங்கிரஸ், திமுக என்ற வலுவான கூட்டணி அமைப்பது, அப்படி நடைபெறும் பட்சத்தில் தமிழகத்தில் அதிமுகவை தனிமைப்படுத்திவிடலாம் என்று கணக்குப் போட்டுள்ளாராம் கேப்டன்.












Click it and Unblock the Notifications