துணை ஜனாதிபதி தேர்தல்: பாஜக தலைவர்கள் புடைசூழ வேட்புமனுத் தாக்கல் செய்தார் ஜஷ்வந்த் சிங்

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடைபெறுகிறது. இதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் ஜஷ்வந்த் சிங் போட்டியிடுகிறார்.
அவர் தனது வேட்புமனுவை பாஜக தலைவர் எல்.கே. அத்வானி மற்றும் ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் ஆகியோர் முன்னிலையில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் சிவ சேனா தலைவர் ஆனந்த் கீதே, ஷிரோமணி அகாலிதள தலைவர் ரத்தன் சிங் அஜ்னாலா, ஹர்சிம்ரத் கௌர் மற்றும் நரேஷ் குஜ்ரால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஹமீது அன்சாரியை ஆதரிக்கவில்லை. மாறாக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜஷ்வந்த் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எப்படி பிரணாப் முகர்ஜிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதோ அதே போன்று தான் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஹமீது அன்சாரிக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications