ஒகேனக்கல் யாருக்கு சொந்தம்?: சர்வே நடத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தை நாடும் கர்நாடகம்!
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை கடந்த திமுக அரசு மேற்கொண்டது. இதன்படி ஒகேனக்கல்லில் இருந்து காவிரி நீரை இந்த மாவட்டங்களில் வினியோகிக்க திட்டமிடப்பட்டது.
ஆனால், தமிழகத்திற்குள் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்துக்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. காரணம், ஒகேனக்கல் பகுதியில் உள்ள பல தீவுப் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதிலேயே பிரச்சனை இருப்பதாகவும், அவை கர்நாடகத்துக்குச் சொந்தமானவை என்றும் அந்த மாநிலம் கூறி வருகிறது.
இந் நிலையில் கர்நாடக சட்ட மேலவையில் நடந்த கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக எம்எல்சி அஷ்வத் நாராயணா, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு அமலாக்கினால், கர்நாடகத்தில் ஏராளமான வனப் பகுதி நிலம் நீரில் மூழ்கும். இதனால் அந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றார்.
இதற்கு பதிலளித்த கர்நாடக பாசனத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, கர்நாடக, தமிழக எல்லையில் உள்ள ஒகேனக்கல் பகுதியில் தமிழக அரசு கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தும் நோக்கத்தில் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஆரம்பத்தில் குறைவான பகுதியை இந்த திட்டத்தில் சேர்த்த தமிழக அரசு, தற்போது அதன் பரப்பளவை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக அரசின் சார்பில் ஆட்சேபனை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் கூட்டு குடிநீர் திட்டம் ஒனேக்கல் பகுதியை மையமாக கொண்டுள்ளது. ஒகேனக்கல் எந்த மாநிலத்துக்கு சொந்தம் என்பது பற்றி பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வரும் நிலையில், தமிழக அரசு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது சரியல்ல.
ஆகவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு மறு சர்வே நடத்த வேண்டும் என்று கர்நாடக அரசின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு மெத்தன போக்கு கடைப்பிடித்து வருகிறது.
இதனால் அந்தப் பகுதியில் 67 கிமீ எல்லையில் மீண்டும் சர்வே நடத்தி எந்தப் பகுதி எந்த மாநிலத்துக்கு சொந்தம் என்பதை உறுதி செய்ய மறு சர்வே நடத்த உத்தரவிடகோரி கர்நாடக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.