பெட்ரோல் விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் தெருவில் இறங்கி போராடுவோம்: மமதா எச்சரிக்கை
இது குறித்து அவர் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் கூட கலந்தாலோசிக்காமல் திடீர் என்று பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளனர். இது மிகவும் தவறான முடிவாகும். உடனே பெட்ரோல் விலையை வாபஸ் பெற வேண்டும். இந்த விலை உயர்வால் மேற்கு வங்கம் போன்ற ஏழை மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டும். இந்த செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.
மத்திய அரசுக்கு எதிராக போராடும்படி தூண்டாதீர்கள். விலை உயர்வை வாபஸ் பெறாவிட்டால் தெருக்களில் இறங்கி போராட வேண்டியிருக்கும்.
எண்ணெய் நிறுவனங்களும், பெட்ரோலியத்துறை அமைச்சகமும் மறு மதிப்பீடு என்ற பெயரில் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன. ஏற்கனவே இடது சாரி அரசால் மேற்கு வங்கம் கடும் கடன் சுமையில் உள்ளது. நான் மேற்கு வங்க முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து மத்திய அரசிடம் இருந்து பைசா பெறவில்லை. மத்திய அரசு ஒரே நேரத்தில் ரூ.8 வரை பெட்ரோல் விலையை உயர்த்தியது. எங்களுக்கு மிரட்டல் விடுப்பது பிடிக்காது. மேலும் பொதுமக்களை தினந்தோறும் ஏமாற்றவும் பிடிக்காது.
மத்தியில் அரசு நடக்கும் முறையை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்றார்.