பள்ளி பேருந்தில் வீடு திரும்பிய போது விபரீதம்-ஓட்டை வழியே விழுந்த மாணவி பலி- பேருந்துக்கு தீ வைப்பு
பரிதாப மரணம்
சென்னை சேலையூர் சீயோன் பள்ளிக் கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தவள் ஸ்ருதி. இவர் முடிச்சூர் வரதராஜபுரம் பரத்வாஜ் நகரைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள். தினமும் பள்ளிக் கூட பேருந்தில் பள்ளிக்கு சென்றுவிட்டு ஸ்ருதி திரும்புவாள். நேற்று மாலை முடிச்சூர் லட்சுமிபுரம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது மாணவி ஸ்ருதி அமர்ந்திருந்த இருக்கை ஆடியது. அப்போது இருக்கையின் அடிப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக ஸ்ருதி கீழே சாலையில் விழுந்தார். அப்போது அதே பேருந்தின் சக்கரம் ஸ்ருதியின் தலையில் ஏறியதில் அவர் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்துக்கு தீ வைப்பு
சாலையில் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் பேருந்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரை சராமரியாகத் தாக்கியுள்ளனர். பின்னர் ஓட்டுநரை போலீசில் பொதுமக்களே ஒப்படைத்தனர். இருப்பினும் ஆத்திரம் அடங்காத பொதுமக்கள் பேருந்துக்கும் தீ வைத்தனர்.
பள்ளி பேருந்தில் ஓட்டை இருந்தும் அதை கவனிக்காமல் மாணவியின் உயிரை பறித்த சம்பவத்துக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே காரணம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமாதானப்படுத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
சம்பவம் நடந்தது எப்படி?
பள்ளி பேருந்தின் நடுவில் மிகப் பெரிய ஓட்டை ஒன்று இருந்துள்ளது. அந்த ஓட்டையை சாதாரண பலகை வைத்து மூடியிருக்கின்றனர். அது அசையாமல் இருக்க ஆணி எதுவும் அடிக்கவில்லை. பேருந்து வேகமாக சென்றபோது அந்த பலகை விலகியிருக்கிறது. இதனால் பேருந்துக்குள் விளையாடிய ஸ்ருதி அப்படியே ஓட்டை வழியாக கீழே விழுந்திருக்கிறாள்.
அதிகாரிகள் அலட்சியம்
சீயோன் பள்ளிக்கு சொந்தமாகவும் பேருந்துகள் உள்ளன. தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்ட பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. குழந்தை ஸ்ருதி விழுந்த பேருந்து எப்சி முடித்து 14 நாட்கள்தான் ஆகிறது.அப்படியானால் இந்த பேருந்தை சரி பார்த்த மோட்டார் வாகன ஆய்வாளர், ஓட்டை இருந்த பேருந்துக்கு எப்சி எப்படி கொடுத்தார்? என்பதும் ஒரு கேள்வி. இதனால் சான்றிதழ் கொடுத்த மோட்டார் வாகன ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.