தமிழகம் முழுவதும் பள்ளிப் பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்க ஆர்டிஓ அதிகாரிகளுக்கு உத்தரவு
சென்னை: சென்னை பள்ளி மாணவி ஸ்ருதி மிகக் கோரமான முறையில் பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரத்தைப் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
எல்லாம் முடிந்த பின்னர்தான் நமக்கு அறிவுக் கண் திறக்கும், அவசரம் அவசரமாக செயல்படுவோம். அரசு இயந்திரமும் இதற்கு விதி விலக்கல்ல. சென்னை முடிச்சூரைச் சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ருதி மிகப் பரிதாபமான முறையில், பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக விழுந்து உயிரிழந்து, அரசின் கண்களைத் திறந்துள்ளாள்.
இந்த கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் சரியான முறையில் உள்ளனவா, ஓட்டும் தகுதியுடன் உள்ளனவா, இருக்கைகள் சரியாக இருக்கின்றனவா, விதிமுறைகள் சரிவரக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்து ஆராய காவல்துறை மற்றும் ஆர்டிஓ அதிகாரிகளுக்கு தமிழக அரசின் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் வாய் மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதையடுத்து ஆங்காங்கு பள்ளி வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கைகளை காவல்துறையினரும், ஆர்டிஓ அலுவலகத்தினரும் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம்தான் பள்ளி வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 13 விதிமுறைகள் கொண்ட பெரிய பட்டியலை போக்குவரத்துறை பிறப்பித்திருந்தது. பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் நிற வண்ணம் பூச வேண்டும், இது பள்ளிக்குழந்தைகள் செல்லும் வாகனம் என முன்னும், பின்னும் எழுத வேண்டும். குறிப்பிட்ட வேகத்தில்தான் வண்டியை ஓட்ட வேண்டும், இத்தனை பேரைத்தான் ஏற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் அதில் கூறப்பட்டிருந்தன.
ஆனால் பெரும்பாலான பள்ளி வாகனங்களில் இது காற்றில் பறக்க விடப்பட்டு வருவதாகவே மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல பள்ளிகள் விதிமுறைகளை முறையாக கடைப்பிடிபப்தில்லை, இவர்கள் மீது அரசு தயவு தாட்சன்யம் பார்காகமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.