7ம் வகுப்பு மாணவியை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியர் டிஸ்மிஸ்
தர்மபுரி: பென்னாகரம் அருகே பள்ளி மாணவியை கண்மூடித்தனமாக அடித்த ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த சின்னவத்தலாபுரத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன். அவரது மகள் மேகாஸ்ரீ (12). அவர் பென்னாகரத்தில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 23ம் தேதி சமூக அறிவியல் பாட வேளையின்போது ஆசிரியர் சுரேஷ் தேர்வு நடத்தியுள்ளார். அப்போது அவர் புத்தகத்தைப் பார்த்து கேள்விகளை எழுதுமாறு கூறியுள்ளார். ஆனால் மேகாஸ்ரீ கேள்விகளை சரியாக எழுதவில்லை என்று கூறி அவரை பிரம்பாலும், கையாளும் அடித்துள்ளார். இதில் காயம் அடைந்த சிறுமி மயங்கிவிட்டார். மயக்கத்தை தெளிய வைத்து தான் அடித்ததை யாரிடமாவது தெரிவித்தால் மீண்டும் அடிப்பேன் என்று ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
அன்று மாலை வீட்டுக்கு சென்ற சிறுமி சோர்வாகவே இருந்துள்ளார். பள்ளிச் சீருடையை கழற்றிப் பார்த்தபோது முதுகு மற்றும் உடல் பகுதிகளில் காயம் இருந்ததைப் பார்த்த பெற்றோர் அதிர்ந்தனர். அதன் பிறகே சிறுமி நடந்தவற்றை தெரிவி்த்தார். இரவோடு இரவாக சிறுமியை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பினார்.
இதற்கிடையே மண்டல மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் மணியம்மாள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி ஆகியோர் பென்னாகரத்தில் உள்ள அந்த தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் ஆசிரியர் சுரேஷ் மாணவி மேகாஸ்ரீயை கண்மூடித்தனமாக அடித்தது உறுதியானது.
இதையடுத்து ஆசிரியர் சுரேஷை பணி நீக்கம் செய்ய பள்ளி நிர்வாகத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் சுரேஷ் பணி நீக்கம் செய்யப்பட்டார்.