கோவில்களை குறிவைத்து கொள்ளையடித்த பலே திருடன் கைது
தூத்துக்குடி: தண்டுபத்து முத்தாரம்மன் கோவிலில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள தண்டுபத்து முத்தாரம்மன் கோவிலில் கடந்த 30ம் தேதி மாலை பூஜை முடிந்த பின் கோவில் பூசாரி குலசேகரப்பட்டிணத்தைச் சேர்ந்த சூரியன் கருவறையை பூட்டி ஜன்னல் வழியே கருவறைக்குள் சாவியை வைத்து விட்டு பக்கத்து கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் பூசாரியை விசாரித்துவிட்டு கருவறை சாவியை எடுத்து அம்மனுக்கு அனுவிக்கப்பட்டிருந்த பொட்டுதாலி, தாலிச்செயினை பறித்து சென்று விட்டார்.
இது குறித்து கோவில் தர்மகத்தா பால்சாமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் சாத்தான்குளம் டி.எஸ்.பி. ராசபால் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனிகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரசலையன், ரவிமதி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவிலில் திருடியது மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சத்யாநகரைச் சேர்ந்த சுயம்பு மகன் பெரியசாமி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், அவ்வப்போது கோவில்களில் நகைகளை திருடி விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஊர், ஊராகச் சென்று உல்லாசமாக இருப்பேன். பணம் குறையவும் வேறு கோவில்களை நோட்டமிட்டு சாமி கும்பிடுவது போல சென்று நகைகளை கொள்ளையடிப்பேன் என கூறியுள்ளார்.
அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் குரும்பூர் புன்னையடி வனதிருப்பதி கோவிலில் கொள்ளையடித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.