ஸ்ருதி மரணம் - உயர்நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வி செயலாளர், போக்குவரத்து செயலாளர் நேரில் விளக்கம்
சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நேற்று முதல் வழக்காக எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது. இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை அதாவது இன்று நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
அதன்படி இன்று காலை இந்த வழக்கு முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா, மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ்ச் செல்வி, போக்குவரத்துத் துறை ஆணையர் பிரபாகர், ஜியோன் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆஜராகினர். அவர்கள் தத்தமது விளக்கங்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி இக்பால் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.