ஒலிம்பிக்ஸிற்கு சீனாவில் இருந்து லண்டனுக்கு ரிக்ஷாவில் சென்ற விவசாயி

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சென் குவான்மிங்(57). விவசாயி. அவர் கடந்த 2008ம் ஆண்டு சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்துவிட்டு லண்டன் ஒலிம்பிக்ஸிற்கு செல்ல ஆசைப்பட்டார். இதையடுத்து அவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் விசா, பணம் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்தார். தொடர்ந்து கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது கிராமத்தில் இருந்து லண்டனுக்கு ரிக்ஷாவில் புறப்பட்டார். அவர் கடந்த 2 ஆண்டுகளாக வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், துருக்கி உள்ளிட்ட 16 நாடுகளைக் கடந்து 6ம் தேதி லண்டனை அடைந்துள்ளார்.
இது குறித்து நரைத்த குறுந்தாடியும், குடுமியுமாக இருக்கும் அவர் கூறுகையில்,
நான் இதுவரை சீனாவை விட்டு வெளியேறியதே இல்லை. ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும் தான் நான் சீனாவில் இருந்து லண்டன் வந்துள்ளேன். வரும் வழியில் தாய்லாந்து வெள்ளத்தையும், துருக்கியின் கடுங்குளிரையும் தாண்டி வந்துள்ளேன். நான் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க வந்துள்ளேன். விருதை எதிர்பார்த்து இவ்வாறு செய்யவில்லை.
பிரான்சில் இருந்து படகு மூலம் இங்கிலாந்து வந்து சேர்ந்தேன். இந்த பயணத்திற்கு நண்பர்கள், அன்பான மக்கள், வழி நெடுகிலும் உள்ள சீன மக்கள் பண உதவி செய்தனர் என்றார்.
அவரது ரிக்ஷாவில் பாரிசில் உள்ள ஈபில் கோபுரம், கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் டவர்ஸ் உள்ளிட்ட பிரபலமான இடங்களில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒட்டி வைத்துள்ளார். கடந்த 9ம் தேதி அவர் லண்டன் தெருக்களில் செய்வதறியாது சென்றதாக இங்கிலாந்தைச் சேர்ந்த காப்பீட்டு புரோக்கர் ஜான் பீஸ்டன் தெரிவித்தார்.
அவருக்கு ஒலிம்பிக் போட்டியைக் காண டிக்கெட் வாங்கிக் கொடுக்க தீவிர முயற்சி செய்து வருகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிகளைக் காண அனுமதி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் அந்த வயதான விவசாயி தனது நீண்ட பயணம் பற்றி பெருமிதம் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications