சிவகாசி அருகே பட்டாசு கழிவுகளை மாட்டு வண்டியில் ஏற்றியபோது தீ: 7 பேர் படுகாயம்
சிவகாசி: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இருந்த பட்டாசுக் கழிவுகளை மாட்டு வண்டியில் ஏற்றியபோது ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் உள்ளது சோனி பயர் ஒர்க்ஸ். இந்த தொழிற்சாலையில் இருந்த பட்டாசுக் கழிவுகளை நேற்று மாலை ஒரு மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது மாட்டு வண்டியில் இருந்த கழிவுகள் திடீரெனத் தீ பிடித்து பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் பட்டாசு கழிவுகளை ஏற்றிக் கொண்டிருந்த பொம்மையராஜ் (43), சுப்பையா (55), மாரியப்பன் (48), வைரமுத்து (38), சீனிவாசன் (55), பாலசுப்பிரமணி (50), ஆறுமுகம் (56) ஆகிய 7 பேர் உடல் மீது தீ பற்றியது. இதில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்பு மேல் சிக்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வைரமுத்து (38), சீனிவாசன் (55), பாலசுப்பிரமணி(50), ஆறுமுகம்(56) ஆகிய 4 பேரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications