பற்றி எரிந்த எஸ் 11 கோச்... : பதறி எழுந்தபடியே ரயிலில் இருந்து குதித்து உயிர் தப்ப்பிய பயணிகள்
சென்னை: டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ் 11 பெட்டி எரிந்தபோது பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தியவுடன் மற்ற பெட்டிகளில் இருந்தவர்கள் ரயிலில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
டெல்லியில் இருந்து சனிக்கிழமை இரவு கிளம்பி இன்று அதிகாலை நெல்லூரை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நெருங்கியபோது எப்படியும் 3 மணி நேரத்தில் சென்னை வந்துவிடும் என்று உறக்கத்திலேயே மணி பார்த்துக் கொண்டு உறங்கியவர்களுக்கு கடும் அதிர்ச்சி...புகை மூட்டம்... ஒரு கோச்சே பற்றி எரிவதுமாக கிடைத்த தகவல்களால் அப்படியே அலறி அடித்துக் கொண்டு மற்ற பெட்டிகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு இறங்கியிருக்கின்றனர்...
இது பற்றி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 9-வது பெட்டியில் பயணம் செய்த அசோக் என்பவர் கூறுகையில், அதிகாலையில் பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர் இந்தியில் அலறியவாறே வந்தார். அப்போது ரயிலும் நின்றுவிட்டது. பின்னர் உடைமைகளுடன் கீழே குதித்து பார்த்தபோது எஸ் 11 - வது பெட்டி பற்றி எரிந்தது. அது எஸ்-10க்கும் பரவியது. ஆனால் நீண்டநேரமாக மீட்புக் குழுவினர் அங்கு வரவில்லை. ரயில் மட்டும் நிற்கவில்லையெனில் இன்னும் எத்தனையோ உயிர்கள் கருகிப்போயிருக்கும் என்றார்.
இதே ரயிலில் விஜயவாடாவில் ஏறிய சித்தம்மா கூறுகையில், கூலி வேலைக்காக சென்னைக்கு வந்து கொண்டிருந்தோம். பொதுப்பட்டியில் நாங்கள் இருந்தோம். அப்போது தீப்பிடித்து நாங்கள் ரயிலிலேயே உடைமைகளை விட்டுவிட்டு கீழே குதித்து தப்பித்தோம் என்றார்.
அண்ணாநகரை சேர்ந்த குந்தல்லால்ஷா என்பவர் கூறுகையில், நான் எஸ்-8வது பெட்டியில் வந்து கொண்டிருந்தேன். அப்போது பின்னால் இருந்த கோச் ஒன்றில் தீ பிடித்து எரிவதைப் பார்த்து அனைவரும் கீழே குதித்தோம் என்றார்.