2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: பாஜக-காங்கிரஸ் ஏட்டிக்கு போட்டி.. ஜே.பி.சி. கூட்டம் ரத்து
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டம் நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்த ஊழல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், 2008ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம் ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று குழுவில் உள்ள பாஜக உறுப்பினர்கள் கோரினர்.
இதையடுத்து மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது அமைச்சர்களாக இருந்த பாஜகவைச் சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ், ஜஸ்வந்த் சிங் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரினர்.
இதைத் தொடர்ந்து பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் குழுவின் தலைவரான பி.சி. சாக்கோ சந்தித்துப் பேசினார்.
அப்போது இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அவரது அலுவலகத்தில் இணைச் செயலாளராக இருந்த அசோக் பிரியதர்ஷி ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்று சின்ஹாவிடம் சாக்கோ கூறினார். இதில் அசோக் பிரியதர்ஷி இப்போது உயிருடனே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாஜ்பாயின் உதவியாளராக இருந்த இணைச் செயலாளரை விசாரிக்க வேண்டும் என்று சொன்னால், இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமைச்சர்களின் உதவியாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோருவோம். அதை ஏற்பீர்களா என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பினார்.
மேலும் இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் அமைச்சர்கள் ராசா, தயாநிதி மாறன் ஆகியோருடனும் கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்தனர். இவ்வாறு இரு தரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சனை செய்ததால், குழுவின் தலைவரான பி.சி. சாக்கோ நேற்று நடைபெறவிருந்த கூட்டத்தைக் கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார்.