அரசு பணத்தை அளவுக்கு ஆட்டையை போடுங்க.. ஒரேயடியாக கொள்ளையடிச்சுட வேண்டாம்: உ.பி. அமைச்சரின் அட்வைஸ்
லக்னோ: அரசு அதிகாரிகள் மக்கள் பணத்தை குறைந்த அளவில் சுருட்டிக் கொள்ளலாம்.. கொள்ளையர்கள் போல் ஒரேயடியாக அள்ளக் கூடாது என்று "அறிவார்ந்த" அட்வைஸ் ஒன்றை வழங்கியிருக்கிறார் உத்தரப்பிரதேச அமைச்சர் சிவ்பால்யாதவ்.
உத்தரப்பிரதேச முதல்வரான அகிலேஷ்யாதவின் உறவினர்தான் அமைச்சர் சிவ்பால் யாதவ். பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய சிவ்பால் யாதவ், கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க..அதுக்கு பலனாக கொஞ்சம் மக்கள் பணத்தை திருடிட்டு போங்க.. கொள்ளைக்காரர்களைப் போல் ஒரேயடியாக கொள்ளையடித்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் கடுமையாக உழைத்து மக்களுக்கு தண்ணீர் கொடுங்கள்.. அப்புறமாக கொஞ்சம் திருடிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவ்பால்யாதவின் இந்தப் பேச்சால் சர்ச்ச்சை வெடித்திருக்கிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதற்கு அமைச்சர் ஒருவரே அனுமதி கொடுப்பதா? என்று பகுஜன் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனிடையே தமது பேச்சு, ஊழலைத் தூண்டும் வகையில் அமைந்துவிடவில்ல என்று சிவ்பால்யாதவ் இன்று விளக்கம் அளித்திருக்கிறார். ஊழலை ஒழிக்கவே சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.