17ல் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்துச் செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்
சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வை ரத்துச் செய்யக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் வரும் 17ம் தேதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு கடந்த மாதம் 22ம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து 6,50,000 பேர் கலந்து கொண்டனர். கேள்வித்தாள் கடினம், குறைவான நேரம், பாடத்திட்டத்தின்படி கேள்விகள் இல்லை என்று தேர்வு எழுதியவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே தேர்வுக்கான விடையை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில் விடைக் குறியீடுகள் தவறாக இருந்ததாகக் கூறி, தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு 24,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டிய நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் எதிர்பார்த்த அளவுக்கு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, தகுதி தேர்வை ரத்து செய்யக் கேரி வரும் 17ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications