சென்னையில் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கு உதவ 24 மணி நேர போலீஸ் கட்டுப்பாட்டு அறை
சென்னை: சென்னையில் வாழும் வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
இருந்தாலும், வடகிழக்கு மாநில மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, 24 மணி நேரமும் செயல்படும், காவல் உதவி மையம் தொடங்கப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் செயல்படுகிறது.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தங்களுக்கு எந்தவித உதவி தேவைப்பட்டாலும், 9840295100, 9677066100, 9789088100 என்ற செல்போன் எண்களில் பேசி, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்றிரவு போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோர் சென்னையில் வசிக்கும், அஸ்ஸாம் மாநிலத்தவர்களின் சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னையில் வடகிழக்கு மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் போலீசாரை ரோந்து சுற்றி வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அச்சப்பட வேண்டாம்-மதுரை போலீஸ்:
அதே போல மதுரையில் உள்ள வெளி மாநிலத்தவர் யாரும் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுலகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் வட கிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல்கள் நடக்கலாம் என்ற புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அவர்கள் அச்சத்துடன் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
இந் நிலையில் இது போன்ற வதந்திகளை நம்பவேண்டாம் என்று மதுரை காவல் கண்காணிப்பாளர் அலுலகம் அறிவித்துள்ளது. வெளி மாநிலத்தவர் தாங்களுக்கு உதவி தேவைப்படும் என்று கருதினால் தங்களை 0452 - 2534070 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.