யாழ்பாணம் தொண்டமானாறு கோவில் உற்சவம் கொடி ஏற்றத்துடன் தொடக்கம்

வல்வெட்டித்துறைக்கு மிக அருகில் உள்ள இந்தக் கோவிலில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது.
இந்த கோவிலில் வழக்கமான இந்துக் கோவில்களில் நடைபெறுவது போன்ற ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிலில் தற்போது பூஜிக்கப்பட்டு வரும் வேலானது தொண்டமானாற்றுப் பகுதியில் கடல் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களால் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டதாக கோவில் வரலாறு கூறுகிறது.
இந்த கோவிலில் வேலை கண்டெடுத்தவரின் பரம்பரையைச் சார்ந்தவர்களே தமது முறையில் பூஜைகளை நடத்தி வருகின்றனர். அவர்கள் தமது வாயினை வெள்ளைத் துணியால் மறைத்து எந்தவித மந்திர உச்சரிப்புக்களும் அற்ற முறையில் பூஜைகள் செய்வது வழக்கம்.
வழக்கமாக இந்த ஆண்டுக்குரிய வருடாந்த மஹோற்சவம் நேற்று நள்ளிரவு தொடங்கியது. இதன் அடையாளமாக கோவிலின் முன்பகுதியில் உள்ள உச்சியில் கொடி கட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உள்ளுரில் இருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். நிகழ்ச்சியில் சுமார் 25,000க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாய் கட்டிப் பூசை செய்யும் முறையானது இலங்கையில் தொண்டமானாறு செல்வச்சந்நிதி மற்றும் கதிர்காமம் ஆகிய இடங்களிலேயே நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications