வட கிழக்கு மாநிலத்தவர் குறித்த வதந்தி... இதுவரை 125 இணையதளங்கள் முடக்கம்
வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமீபத்தில் வதந்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வரும் வட கிழக்கு மாநிலத்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குக் கிளம்பியதால் நாடே அல்லோகல்லப்பட்டு விட்டது.
இந்த நிலையில் எங்கிருந்து வதந்தி பரவுகிறது என்பதை அரசு தீவிரமாக விசாரிக்க களம் இறங்கியது. இதில் வதந்தி பரப்புவோர் கண்டுபிடிக்கப்பட்டு கைதாகி வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு இணையதளங்களிலிருந்து வதந்தி செய்திகள், பொய்யான செய்திகள் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை முடக்கி வருகிறது அரசு.
அதன்படி துவேஷ் கருத்துக்களை, வன்முறைக் கருத்துக்களை, போலியான புகைப்படங்களை பிரசுரித்த, வெளியி்ட்ட 125க்கும் மேற்பட்ட இணையதளங்களை இதுவரை அரசு முடக்கியுள்ளது. இதில் டிவிட்டர், கூகுள், பேஸ்புக் கணக்குகள் சிலவும் அடக்கம்.
நேற்று மட்டும் 76 இணையதளங்களை முடக்க அரசு உத்தரவிட்டது. இந்த வன்முறை வதந்திகள் பாகிஸ்தானிலிருந்துதான் கிளம்பின என்பதையும் அரசு கண்டுபிடித்துள்ளது. இதுவரை மொத்தமாக 125க்கும் மேற்பட்ட தளங்களை அரசு முடக்கியுள்ளது.