பி.ஆர்.பி. கும்பலுக்கு 3,000 ஏக்கர் சொத்து.. புதிதாக கொலை மிரட்டல் வழக்கும் பதிவு

இந்த கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பாக, இதுவரை 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகள் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவன அதிபரான பி.ஆர். பழனிச்சாமி மீது பதிவாகியுள்ளன. அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பி.ஆர்.பியின் சொத்துகள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. பழனிச்சாமி, அவருடைய உறவினர்கள் பெயரில் மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் மட்டும் 3,000 ஏக்கருக்கு மேல் சொத்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் கோவையைச் சேர்ந்த அரசு துணை வழக்கறிஞர் பிரேமா கருணாகரன் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் பி.ஆர்.பழனிச்சாமி மீது ஒரு புகார் தந்துள்ளார். அதில், மதுரை வடக்கு ராஜாக்கூர் உட்கோட்டம் சிவலிங்கம் கிராமத்தில் எனக்குச் சொந்தமாக 6.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம், அப்பகுதியைச் சேர்ந்தவருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
நிலத்தின் அருகே, பி.ஆர்.பி. நிறுவனத்தின் கிரானைட் குவாரி செயல்பட்டு வந்தது. இந்தக் குவாரியின் கற்கள் அனைத்தும் எனது நிலத்தைச் சுற்றி குவிக்கப்பட்டது. இதனால், நிலத்துக்கு நாங்கள் செல்ல முடியவில்லை. அதோடு, நிலத்தை பிஆர்பி தரப்பினர் குத்தகைதாரரிடமிருந்து மிரட்டி எழுதியும் வாங்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பி.ஆர்.பழனிச்சாமி, ராஜேஷ்கண்ணன், பொன்முடி, கண்ணன், பாலசரவணன், சக்கரவர்த்தி, தாமரைப்பட்டியின் முன்னாள் சார் பதிவாளர், நெல்சன் ஆகியோர் மீது ஒத்தக்கடை போலீஸார் கூட்டாகச் சேர்ந்து மிரட்டுதல், மிரட்டல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications