சர்தாரியை சந்தித்தார் மன்மோகன் சிங்.. 26/11 விசாரணையை முடுக்கி விட கண்டிப்பு!

ஈரான் தலைநகர் டெஹரான் சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். அங்கு 16வது அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக சென்றுள்ள பிரதமர் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் தனியாக சந்தித்து சுமார் அரை மணி நேரம் உரையாடினர்.
அப்போது மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகள் தொடர்ந்து பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருவது குறித்து தனது கவலையைத் தெரிவித்தார் பிரதமர். அவர்கள் மீதான விசாரணையை பாகிஸ்தானிய அரசு விரைவுபடுத்தி குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டார். இப்படிச் செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் நம்பகத்தன்மை ஏற்பட வழி செய்ய முடியும், உறவு பலப்படும் என்றும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
இந்த சந்திப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறுகையில், தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியாவின் கவலையை பிரதமர் வலியுறுத்திக் கூறினார். மும்பை தீவிரவாத தாக்குதல் விசாரணையை விரைவுபடுத்துமாறும் அவர் பாகிஸ்தான் அதிபரை கேட்டுக் கொண்டார் என்றார்.
சிங்குடன், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். சர்தாரியுடன் அழரது மகன் பிலாவல் பூட்டோ, வெளியுறவு அமைச்சர் ஹீனா ரப்பானி கர், உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு வருமாறு ஏற்கனவே தான் விடுத்திருந்த அழைப்பை சர்தாரி, பிரதமருக்கு நினைவூட்டி மறுபடியும் அழைப்பு விடுத்தார். அதற்கு பிரதமர் நன்றி கூறினார்.
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் உயிருடன் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு மரண தண்டனையை உச்சநீதி்மன்றம் உறுதிப்படுத்திய நிலையில் இந்திய, பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பு முதல் முறையாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications